- நமது நிருபர் -: வாக்காளர் பட்டியல் சிறப்பு கணக்கெடுப்பு (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் நிறைவடைந்த சூழலில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் பவன்குமார் வெளியிடுகிறார். கோவை மாவட்டத்தில், கடந்த நவ.,4 முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு கணக்கெடுப்பு பணி துவங்கியது. கடந்த, 4ம் தேதி நிறைவடைவதாக இருந்தது; அதன்பின், 14ம் தேதி வரை நீட்டித்து நிறைவடைந்தது. கோவை மாவட்டத்திலுள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில்,1,13,592 பேர் காலமாயினர். வீடுகள் பூட்டப்பட்டதாகவும், வீட்டில் ஆட்கள் இல்லை என்றும், 76,096 பேர், முகவரி மாறி சென்றவர்கள், 2,91,928 பேர். இரு இடங்களில் ஓட்டுரிமை பெற்றவர்கள், 20,245 பேர், பல காரணங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டவர்கள், 395 பேர் என மொத்தம் 5,02,256 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதாவது, 15.58 சதவீதம் பேர். கோவை மாவட்டத்தில் தற்போது உள்ள, 32,25,198 மொத்த வாக்காளர்களில், மேற்சொன்ன பல காரணங்களால், 5,02,256 பேர் நீக்கம் செய்யும் பட்சத்தில் மீதமுள்ள, 27,22,942 பேர் மட்டுமே மொத்த வாக்காளர்களாக இருப்பர் என்று, கடந்த 8ம் தேதி மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறினர். இந்நிலையில் மேலும், 5 சதவீத வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறினர். மாவட்ட தேர்தல் பிரிவினர்கூறியதாவது: கோவைமாவட்டத்தில், 20 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பலர் காலமாகிவிட்டனர். பெரும்பாலானவர்கள் வெவ்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம் மாறி சென்றனர். அப்படி இடம் மாறி சென்றவர்கள், மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் இருப்பர். தற்போதைய மொத்த வாக்காளர்களில், 6,45,039 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இன்று, (19ம் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.அதன்பின், ஜன.,15 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து, மறுப்பு தெரிவித்து விண்ணப்பிக்கலாம். பிப்.,16ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, கூறினர்.
மக்கள் பார்வையிடலாம்!
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வாக்காளர் பட்டியலை ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மக்கள் பார்வையிடலாம். அதில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய சேர்த்தல் போன்றவற்றிற்கு, படிவங்களை பூர்த்தி செய்தும் ஜன.,15 வரை கொடுக்கலாம். ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவித்து விண்ணப்பிக்கலாம். இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடப்படும். மாவட்ட அளவில் சட்டசபை தொகுதி வாரியாக இறந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள், தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் வெளியிடப்படும். மாவட்ட அளவில், 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு நிலையில், ஒரு ஓட்டு சாவடிக்கு, 800 முதல் 900 வாக்காளர்கள் வரையே இருப்பர். இதனால் தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதம் உயரும் என்கின்றனர் தேர்தல் அலுவலர்கள்.