| ADDED : நவ 25, 2025 05:47 AM
வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும், என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் நடமாடுகின்றன. சில நேரங்களில் எதிரே வரும் மனிதர்களை தாக்குகின்றன. இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில், இரவு நேரத்தில் தற்போது சிறுத்தையும் நடமாடுவதை, அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வலைதளங்களில் வெளியிடுகின்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை மலைப்பாதையில் இரவு நேரங்களில் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். ரோட்டில் தென்படும் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதாக கூறி அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால், அவை வனப்பகுதிக்குள் செல்லும் வரை வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும். வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும். வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் இரவு நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு, கூறினர்.