மேட்டுப்பாளையம்:''எம்.ஜி.ஆரை அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி., ராஜாவுக்கு, வரும் லோக்சபா தேர்தலில், சரியான பாடம் புகட்ட வேண்டும்,'' என, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசினார். சிறுமுகையில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சிறுமுகை நகர செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுமார் வரவேற்றார்.மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் நலத்திட்ட உதவி வழங்கி பேசுகையில், ''பல்லடத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்தில், பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்., ஜெ., ஆட்சி சிறப்பாக இருந்தது என பேசியுள்ளார்.ஆனால், அ.தி.மு.க.,வினர் மனதில் நீங்கா இடம் பிடித்து, தெய்வமாக வழிபடுகின்ற எம்.ஜி.ஆரை, நீலகிரி எம்.பி., ராஜா கேவலமாக பேசியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்,'' என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், திரைப்பட இயக்குனர் உதயகுமார், தலைமைக் கழக பேச்சாளர் புரட்சித்துரை உட்பட பலர் பேசினர். மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் நாசர், காரமடை ஒன்றிய தலைவர் மணிமேகலை மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலா, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட் உட்பட பலர் பங்கேற்றனர். சிறுமுகை பேரூராட்சி, 18 வார்டுகளில் உள்ள அ.தி.மு.க.,வினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சி ஜெ. பேரவை செயலாளர் சிறுமுகை பாபு நன்றி கூறினார்.