| ADDED : டிச 25, 2025 05:18 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் ஓடும் பவானி ஆற்றில், பல்வேறு இடங்களில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் பவானி ஆறு குப்பைத் தொட்டியாக மாறி, தண்ணீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பவானி ஆறு கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேட்டுப்பாளையம் நகரில் இருந்து சிறுமுகை வரை பவானி ஆற்றில், 17 குடிநீர் திட்டங்களுக்கு, தினமும் பல கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரும், பவானி ஆற்றில் கலந்து வந்தது. இதனால் ஆற்றுத் தண்ணீர் மாசுபடுவதாக, பொதுமக்களிடையே புகார் எழுந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சியில், 100 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள், கடை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் குப்பையை, ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றுத் தண்ணீர் மாசடைகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், கடை வியாபாரிகள், மண்டி உரிமையாளர்களுக்கு, ஆற்றில் குப்பை கொட்டக் கூடாது என, எச்சரிக்கை விடுக்க வேண்டும்.