கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மாதம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும், 27ம் தேதி இக்கூட்டம் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பாலக்காடு மெயின் ரோடு, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் உள்ள பேராசிரியர் அல்கொண்டான் ஹாலிலும், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி குன்னுார் ரோடில் உள்ள காய்பீயஸ் (kaypeeyes) கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கோர்ஸ்லி ஹில்லிலும் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை நேரில் முறையிடலாம். யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சல் வாயிலாக, பகிர்ந்து கொள்ளலாம். கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத உறுப்பினர்கள், அனைத்து வேலை நாட்களிலும் கோவை மண்டல அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி, ஊட்டி, குன்னுாரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களில் பார்வையிடலாம். இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.