| ADDED : நவ 19, 2025 01:20 AM
தொண்டாமுத்தூர்: பேரூரில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். பேரூர் தாலுக்கா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேரூர் தாசில்தார் சேகர் தலைமையிலான வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரூர் - வேடபட்டி செல்லும் ரோட்டில், கிராவல் மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில், உரிய அனுமதி பெறாமல், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, டிப்பர் லாரி டிரைவர்களிடம் விசாரணை செய்ய முயன்றபோது, டிரைவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின், இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.