உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கான்ட்ராக்டரிடம் கமிஷன் ஊராட்சி தலைவர் கைது

கான்ட்ராக்டரிடம் கமிஷன் ஊராட்சி தலைவர் கைது

பரங்கிப்பேட்டை:கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில், குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை, ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் செய்கிறது. மஞ்சக்குழி ஊராட்சியை சேர்ந்த சப் - கான்ட்ராக்டர் சந்தோஷ் என்பவர் மூலம் பணி நடந்தது.இப்பணிக்காக, தனக்கு 2 சதவீதம் கமிஷனாக 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, சந்தோஷிடம், மஞ்சக்குழி ஊராட்சித் தலைவர் சற்குருநாதன் கேட்டார். மேலும், லஞ்ச பணத்தை இரு தவணைகளாக கொடுக்கும்படி கூறினார். கமிஷன் கொடுக்க விரும்பாத சந்தோஷ், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அதன் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய 15 ஆயிரம் ரூபாயை நேற்று, மஞ்சக்குழி ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் சற்குருநாதனிடம் சந்தோஷ் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், ஊராட்சித் தலைவர் சற்குருநாதனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.மேலும், சம்மந்தம் கிராமத்தில் உள்ள சற்குருநாதன் வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை