| ADDED : மே 09, 2024 04:23 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே வாந்தி, பேதியால் இரு முதியவர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 65. இவர், வாந்தி, பேதி காரணமாக கடந்த 6ம் தேதி இறந்தார். இவர், குள்ளஞ்சாவடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கிராம மக்களிடையே தகவல் பரவியது. இதனால், திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்கள் கடலுார் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த புலியூரை சேர்ந்த நாராயணசாமி,60;என்பவர் கடந்த 7ம் தேதி இறந்தார்.அடுத்தடுத்து இரு முதியவர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து புலியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் நேற்று புலியூர், தொண்டமாநத்தம், சின்னதானங்குப்பம் கிராமங்களில் முகாமிட்டு பொதுமக்களை பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.மேலும், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டதாக கூறப்பட்ட திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து விருந்தில் வைக்கப்பட்ட குடிநீர் பாட்டில் மற்றும் உணவு சமைக்க பயன்படுத்திய எஞ்சிய பொருட்களை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.