| ADDED : ஜூலை 18, 2024 10:59 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்த வழக்கில், இருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி, 60; இவரது வீடு கடந்த 13ம் தேதி முதல் பூட்டியிருந்த நிலையில், 15ம் தேதி துர்நாற்றம் வீசியது.போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, கமலீஸ்வரி, அவரது இளைய மகன் சுமந்த் குமார், 37; அவரது மகன் இசாந்த், 8; ஆகியோர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சுமந்த்குமார் முன்பு வேலை செய்த பெங்களூரு, தற்போது வேலை செய்து வந்த ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்திய விசாரணையிலும், சுமந்த்குமாரின் இரண்டாவது மனைவி யிடம் நடத்திய விசாரணையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.மூன்றாம் நாளான நேற்று முன்தினம் கொலை நடந்த இடத்தில் மீண்டும் தடயவில் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டு சுவரில் ரத்தக்கரையை மாதரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டை சேர்ந்த 4 பேரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அதில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.இந்நிலையில், அப்பகுதி யில் தனியாக வசித்து வந்த நபர், கொலை நடந்த நாள் முதல் தலைமறைவானதால், சந்தேகத்தின் பேரில் அந்த நபர் உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், நகைக்காக மூவர் கொல்லப்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.