உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் விளை பொருட்களை உலர்த்துவதால் விபத்து அபாயம்

சாலையில் விளை பொருட்களை உலர்த்துவதால் விபத்து அபாயம்

விருத்தாசலம்: சாலையில் விளைபொருட்களை உலர்த்துவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் பகுதியில் நெல், எள், உளுந்து, வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் நெல், உளுந்து, எள், வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை உலர்த்தி, எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.வெயில் காலங்களில் வயல் வரப்புக்கு அருகே தார்பாய் விரித்து, பயிர்களை உலர்த்தி விடுகின்றனர். ஆனால், மழை காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளில் உலர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உலர் களங்கள் அமைக்கப்பட்டன.நாளடைவில் உலர் களங்களில் சிமெண்ட் தளம் பெயர்ந்து, விரிசல் விழுந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இதனால் மழை காலங்களில் சாலையில் விளைபொருட்களை உலர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது, விருத்தாசலம் பகுதியில் உள்ள கிராம சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அறுவடை செய்த எள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை உலர்த்துவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பயிர்களின் கழிவுகளை சாலையோரம் குவித்து, விவசாயிகள் எரித்து விடுகின்றனர். இந்த புகையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளதால், விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும்.எனவே, ஊராட்சிகள் தோறும் பழுதடைந்த உலர் களங்களை புனரமைக்கவும், புதிதாக கட்டித்தரவும் மாவட்ட நிர்வாகம், வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !