| ADDED : ஜூலை 23, 2024 11:21 PM
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சாமியார்பேட்டை, சிலம்பிமங்களம், அத்தியாநல்லுார், கொத்தட்டை, சின்னகுமட்டியில் 2 இடம், தச்சக்காடு ஆகிய 7 இடங்களில் சவுடு மணல் குவாரிகள் இயங்கி வந்தது. இங்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட சுமார் 20 அடிக்கு கீழே சென்று மணல் அள்ளப்பட்டு வருகிறது. வருவாய் துறை மற்றும் உள்ளூர் போலீசார் ஆசியோடு இந்த விதிமீறல் நடந்து வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.அதையெடுத்து, சவுடு மண் குவாரிகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அதில், சவுடு மண் குவாரிகளில் விதிமீறில் கண்டறியப்பட்டது. அதையடுத்து, அப்பகுதியில் இயங்கி வந்த மண் குவாரிகள் அதிரடியாக மூடப்பட்டது. இதனால், குவாரி நடத்தியவர்கள் மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட கையூட்டு அதிகாரிகளும் புலம்பி வருகின்றனர்.