| ADDED : மே 09, 2024 04:18 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 25ம் தேதி இரவு முதல் காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனர்.அதில், சிறுமியை சிறுமியை கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்த சிவபெருமான் மகன் வேல்முருகன், 46, கடத்தி சென்றது தெரிய வந்தது.கடலுாரில் பதுங்கி இருந்த வேல்முருகனை நேற்று போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், திருமண ஆசை காட்டி சிறுமியை காரில் கடத்தி சென்றதாக தெரிவித்தார்.அதன்பேரில் போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை போக்சோ பிரிவில் மாற்றம் செய்து, வேல்முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.கைது செய்யப்பட்ட வேல்முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
போன் எடுத்ததால் விபரீதம்
வேல்முருகன் ஒன்றரை ஆண்டிற்கு முன் வேலை விஷயமாக சிறுமியின் தந்தைக்கு போன் செய்தார். அப்போது சிறுமி எடுத்து பேசியுள்ளார். அன்று முதல் வேல்முருகன் தினசரி சிறுமியிடம் மொபைல் போனில் பேசி திருமண ஆசை காட்டி, கடந்த 25ம் தேதி இரவு காரில் கடத்தி சென்று, கடலுரில் குடும்பம் நடத்தியுள்ளார்.