உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம், : பெண்ணாடம் குறுவட்டத்தை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து, புதிய வருவாய் குறுவட்டம் அமைக்க அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, மேற்கு, தொழுதூர், பெண்ணாடம் ஆகிய நான்கு வருவாய் குறுவட்டங்கள் உள்ளன.அதில், திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்தில் 25 வருவாய் கிராமங்கள்; மேற்கு குறுவட்டத்தில் 19; தொழுதூர் குறுவட்டத்தில் 21; பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 என மொத்தம் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. மற்ற குறுவட்டங்களை விட இரண்டு மடங்கு அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பெண்ணாடம் குறுவட்டத்தில் மட்டும் 44 வருவாய் கிராமங்கள் மற்றும் துணை கிராமங்கள் உள்ளன. இதற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் மட்டுமே உள்ளார்.இதனால் மக்கள் தொகை மற்றும் விவசாயம் சார்ந்த கணக்கெடுப்பு, வருவாய் கிராமங்களில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், கலவரங்கள் உள்ளிட்ட அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை நிர்வகிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படுகிறது.பிரச்னைகள் தடுக்கவும், நிர்வாக காரணங்களுக்காகவும் பெண்ணாடம் வருவாய் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய வருவாய் குறுவட்டம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பெண்ணாடம் வருவாய் குறுவட்ட கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுவது தொடர்கிறது.எனவே, பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய குறுவட்டம் அமைக்க மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி