| ADDED : ஜூன் 04, 2024 05:09 AM
பெண்ணாடம், : நுாறு ஆண்டுகள் பழமையான திருமலை அகரம் விசுவநாதர் கோவிலை புனரமைக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில் நுாறு ஆண்டுகள் பழமையான விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவில் உள்ளது. கோவில் கருவறையில் சிவன், விஷ்ணு இருவரும் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.இதனால் இவ்வூருக்கு திருமலை அகரம் (விஷ்ணு - திருமால், சிவன் - அகரம்) என பெயர் வந்ததாக வரலாறு. கோவிலில் விநாயகர், முருகன், கால பைரவர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் உள்ளன. விசாலாட்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அவர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடக்கிறது.கோவில் கடந்த 50 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பாழடைந்துள்ளதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுளளது. சிலைகளும் உடைந்துள்ளன. ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது. இக்கோவில் திருப்பணிக்கு கடந்த 2007ல் பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் திருப்பணி துவங்காததால் 2010ல் பணம் பழனி கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. திருப்பணியை துவங்க கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இதனால் கோவில் சிலைகள், கோபுரங்கள் சேதமடைந்துள்ளது.எனவே, திருமலை அகரம் விசுவநாதர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.