விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜர் சுவாமி பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பகல் 11:00 மணிக்கு மேல், நடராஜர் சன்னதியில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர், நடராஜர் சுவாமி நர்த்தனம் ஆடியபடி, கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, கிழக்கு கோபுரம் வழியாக முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். முன்னதாக சிவகாமசுந்தரி அம்மன் மணிமுக்தாற்றில் மஞ்சள் இடிக்கும் ஐதீக நிகழ்வு நடந்தது.