உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரயில்வே பாலத்தில் இணைப்பு சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்

 ரயில்வே பாலத்தில் இணைப்பு சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம்: மணலுார் ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு இணைப்பு சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி-சென்னை ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் மணலுாரில் ரயில்வே கேட் இருந்தது. இவ்வழியாக வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ், லாரி உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றன. ரயில்கள் வருகையின்போது கேட் மூடப்படுவதால், போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, மணலுார் ரயில்வே கேட்டில் 14 கோடி ரூபாயில், மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் ரயில்கள் செல்லும்போது சிரமமின்றி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பாலத்தை சரிவர பராமரிக்காத காரணத்தால், 'பில்லர்'களை இணைக்கும் இரும்பு இணைப்புகள் சேதமடைந்தன. வாகனங்கள் செல்லும்போது பழுதான இரும்பு இணைப்புகள் பெயர்ந்தன. இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். தற்போது இரும்பு இணைப்பு பெயர்ந்து, ஒரு பகுதி மேல்நோக்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதன் மீது கல், செடிகளை போட்டு, எச்சரிக்கை ஏற்படுத்தினர். எனவே, மேம்பாலத்தில் பெயர்ந்த இரும்பு இணைப்புகளை சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ