| ADDED : பிப் 13, 2024 05:58 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே 10 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.விருத்தாசலம் வழியாக சென்னை, விழுப்புரம், திருச்சி, கும்பகோணம், வேலுார், சேலம், கடலுார், புதுச்சேரி உட்பட பல பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதற்காக, விருத்தாசலம் நகருக்கு வெளியே 10 ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை போடப்பட்டது. இதன் மூலம் கடலுார் - திருச்சி, சேலம் - சிதம்பரம் மார்க்க வாகனங்கள் நெரிசலின்றி சென்று வருகின்றன.இந்நிலையில், விருத்தாசலம் புறவழிச்சாலையில் சித்தலுார் ரவுண்டானாவில் அதிக விபத்துகளை தவிர்க்கும் வகையில், ஒன்னரை ஆண்டுகளுக்கு முன் 2 கோடி ரூபாயில் விரிவாக்கப் பணிகள் நடந்தது. அதைத் தொடர்ந்து, ரவுண்டானாவில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி மார்க்கத்தில், 1 கி.மீ., தொலைவிற்கு 10 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக, சாலையின் இருபுறம் தோண்டப்பட்டு, அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதுபோல், வேடப்பர் கோவில் முன்பு ராட்சத கல்வெர்ட் கட்டப்படுகிறது. ஓரிரு மாதங்களில் இப்பணிகள் முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.