பரங்கிப்பேட்டையில் இருந்து கடல்நீர் உள்ளே செல்வதைத் தடுக்கும் வகையில், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரங்கிப்பேட்டை : வெள்ளாறு கூடலையாத்துாரில் துவங்கி, சேத்தியாத்தோப்பு வழியாக பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. புவனகிரி மற்றும் வெள்ளாறு கரையோர கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.காலப்போக்கில், பரங்கிப்பேட்டை கடலில் இருந்து உவர்ப்பு நீர் வெள்ளாற்றுக்குள் புகுந்ததால், தற்போது பல கிராமங்களில் குடிநீர், உவர்ப்பு நீராக மாறியது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில கிராமங்களில் மட்டுமே பாதிப்பு இருந்தது. தற்போது பரங்கிப்பேட்டையில் துவங்கி, ஆதிவராகநல்லுார், தம்பிக்குநல்லான்பட்டிணம், கீழ் புவனகிரி, புவனகிரி, பெருமாத்துார், வண்டுராயன்பட்டு, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரங்கிப்பேட்டை கடலில் இருந்து வெள்ளாற்று வழியாக உவர்ப்பு நீர் உள்ளே வருகிறது. இதனால், விவசாய நிலங்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.வெள்ளாற்று நீரில் கடல் நீர் உட்புகுந்ததால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 20 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.குடிப்பதற்கு மினரல் வாட்டரும், முப்போகம் செய்து வந்த விவசாயிகள் ஒரு போகம் மட்டும் விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், அப்பகுதி மக்கள் பல பொதுநல அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்டத்தில் பொறுப்பேற்கும் ஒவ்வொரு கலெக்டர்களிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் பழனிசாமி, புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று உறுதியளித்தார்.அதைத்தொடர்ந்து, புவனகிரி வெள்ளாற்று குறுக்கே பு.ஆதிவராகநல்லுார் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அனைத்து விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து விரைவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்தனர்.அப்போது, 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டும், நிலம் கையகப்படுத்த 33 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்பட்டது.இந்நிலையில், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே எப்போது, தடுப்பணை கட்டப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு, நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.தேர்தல் நடக்கும் போதெல்லாம் பிரசாரத்திற்கு புவனகிரிக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு செல்வதோடு சரி. ஆனால், அது வாக்குறுதியாக மட்டுமே உள்ளது.வெள்ளாற்றின் இருப்புறமும் நிலம் கையகப்படுத்தி, தடுப்பணை கட்ட தற்போதைய திட்ட மதிப்பீடு 150 கோடி ரூபாய் செலவாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.பல ஆண்டாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையேற்று அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.