மொரப்பூர்: மொரப்பூர் அருகே, குடிநீர் வராததை கண்டித்து, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பள்ளிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து குடிநீர் வினியோகம் நடக்கிறது.இந்நிலையில், மின்மோட்டார் பழுதால் கடந்த, 2 நாட்களாக குடிநீர் வினியோகம் நடக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பள்ளிப்பட்டி கிராம மக்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு, மருதிப்பட்டி - தொட்டம்பட்டி சாலையில், வெளாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அங்கு வந்த பஞ்., தலைவர் சாந்தி கமலேசன், மொரப்பூர் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில மணி நேரத்திற்குள் பழுதடைந்த மின்மோட்டார் சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், 11:30 மணிக்கு கலைந்து சென்றனர்.திருவிழா பேனர் கிழித்தோர் மீது
நடவடிக்கை கோரி முற்றுகை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பனந்தோப்பு பகுதியில், இரு தரப்பை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பனந்தோப்பு மாரியம்மன் தோவில் பண்டிகை நேற்று நடந்தது. இதற்காக ஒரு தரப்பினர் தெருக்களில் பேனர் வைத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர், கத்தியுடன் வந்து பேனர்களை கிழித்துள்ளனர்.இது குறித்து நடவடிக்கை கோரி, 100க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள், சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு மற்றும் ஆயுதப்படை போலீசார், 50க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தினர்.பேனர் கிழித்த விவகாரத்தில், 'சிசிடிவி' காட்சி மற்றும் புகார் அடிப்படையில் பசுபதி, 24, ஸ்ரீ, 22, சக்திவேல், 24, ஹரிபிரசாத், 22 ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும், 7 பேரை தேடி வருகின்றனர்.