| ADDED : மே 11, 2024 11:37 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த உடையானுாரை சேர்ந்தவர் தனசேகரன், 58; இவருக்கு கடந்த, 33 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த, 10 ஆண்டுகளாக யாசின், 32, என்ற திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.ஏற்கனவே முதல் கணவருக்கு பிறந்த சாந்தினி, 14, என்ற மகளும், தனசேகரனுக்கும், யாசினுக்கும் பிறந்த சபானா, 10, என்ற மகளும் என நால்வரும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கள்ளியூரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாசின், 200 ரூபாய்க்கு நுங்கு வாங்கி மகள்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, நுங்கு சாப்பிடுவதில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தனசேகரன் யாசினை கத்தியால் சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த மகள் சாந்தினியையும் குத்தினார். இதில் தாய், மகள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரித்து, தனசேகரனை கைது செய்தனர்.