பாப்பிரெட்டிப்பட்டி: தாசில்தார் சீல், அரசு முத்திரை போலியாக தயாரித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளபட்டியை சேர்ந்தவர் கோபால், 86. விவசாயி; இருளப்பட்டியில் உள்ள தனது, மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை தனது மகன் ராமஜெயம், 54, பெயரில் கிரையம் செய்ய கடந்த மாதம், 26ல் பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய சென்றார்.அப்போது, அனுபவ சான்றை பார்த்த சார் பதிவாளர் சரவணன், சந்தேகமடைந்து உண்மை தன்மை அறிய பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணனுக்கு அனுப்பினார். அனுபவ சான்றிதழ் போலியானது. அதில் போடப்பட்ட தாசில்தார் கையெழுத்து போலியானது என தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் சரவணன், ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.கடந்த, 17ல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கோபாலை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கோபால், அவரது மகன் ராமஜெயத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், தனது தந்தை கோபால், தங்களது மூன்று ஏக்கர் நிலத்தை என் பெயரில் கிரையம் செய்ய, குண்டல்மடுவு பகுதியை சேர்ந்த பத்திர எழுத்தர் சந்திரன், 36, என்பவரை அணுகினார்.அவர் தாசில்தாரிடம் அனுபவ சான்றிதழ் வாங்க வேண்டும். அதை நானே வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி அதற்காக, ஒரு லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். பின் மெனசியை சேர்ந்த அருள், 43, அதே பகுதியை சேர்ந்த அரூர் தாலுகா அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த சந்திரசேகர், 42, ஆகிய மூவரும் சேர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாரின் போலி சீல் மற்றும் போலி அரசு முத்திரை தயாரித்து, அதன் மூலம் தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, அனுபவ சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ய கூறியதும், பதிவு செய்ய முற்பட்ட போது மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதையடுத்து கோபால், 86, அவரது மகன் ராமஜெயம், 54, அருள், 43, சந்திரசேகர், 42, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர்.