திண்டுக்கல்: பழநியில் நடக்கும் முருகன் மாநாட்டிற்கு தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செய்திட கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.பழநியில் நடக்க உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், எஸ்.பி., பிரதீப், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கலெக்டர் பேசியதாவது: பழநி பழனியாண்டவர் கல்லுாரி வளாகத்தில் ஆக. 24, 25 ல் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு -தொடர்ந்து, பழநி செல்லும் ரோடுகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநாட்டு திடலில் உள்கட்டமைப்பு வசதிகள், இருக்கை வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்கார அமைப்புகள், வழிகாட்டி பலகைகள், உணவு கூடம், ஓய்வுக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்வதோடு, பக்தர்கள் உணவு அருந்துவதற்கு ஏதுவாக கல்லுாரி வளாகத்தில் உள்ள உணவு அருந்தும் கூடங்கள், ஆண்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு கல்லுாரி வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளை மராமத்து செய்திட வேண்டும்.மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென 11 இருக்க வசதி கொண்ட 5 பேட்டரி கார்கள் ,கண்காணிப்பு,பாதுகாப்பு பணி மேற்கொள்ள போதுமான அளவில் போலீசாரை பணியமர்த்தி,பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் , தற்காலிக புறநகர் காவல்நிலையம் அமைப்பதோடு மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி டிரோன் கேமராக்கள் பறப்பதை தடை செய்திட வேண்டும் என்றார்.