| ADDED : ஜூலை 10, 2024 10:11 PM
திண்டுக்கல்:''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக,'' ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சி கோயிலில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்யக் கோரி ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல் வந்த அவர் கூறியதாவது: இதுவரை 20ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். பிற மதத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. அ.தி.மு.க., -பா.ம.க., - காங்., நிர்வாகிகள் மட்டுமன்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ரவுடிகளின் செயல்பாடுகளை உளவுத் துறை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரவுடிகளுடன் ஆளும் கட்சியினர் இணக்கமாக உள்ளதால், போலீசார் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லாதபட்சத்தில் 2026 சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை தி.மு.க., சந்திக்கும்.பழநியில் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வியாபாரிகளுடன் இணைந்து ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்து தேவாலயங்கள், மசூதிகள் கட்டுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜூலை 21ல் மாவட்ட தலைநகரங்களில், ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.