கழிவுநீர் தேக்கத்தை தடுக்கக்கோரி மறியல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் -- வத்தலக்குண்டு ரோட்டில் குடைப்பாறைபட்டி, அந்தோணியார்தெரு அமைந்துள்ளது.இந்த பகுதியில் மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2 நாட்களாக அந்தோணியார்தெரு கல்லறை தோட்டம், சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கியது.பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீரில் இறங்கி மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஆத்திரமடைந்த மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்- - வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளிக்க மறியல் கைவிடப்பட்டது.