| ADDED : நவ 25, 2025 05:13 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் தொழிலுக்காக மனைவி வாங்கிய ஒரு கோடி ரூபாய் கடனை திருப்பி தராததால், அவரின் கணவரை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் 60. கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவி கனகவள்ளி 55. இவர், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக திண்டுக்கல் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பெண் உட்பட சிலரிடம் ரூ.1 கோடி கடன் வாங்கினார். 3 மாதம் வட்டி செலுத்தியுள்ளார். பின் வட்டி தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால், கனகவள்ளி பணம் கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், அவரின் கணவர் சக்திவேலை காரில் கடத்தி சென்றனர். தொடர்ந்து, கனகவல்லியை அலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் திருப்பிக் கொடுக்காவிட்டால் சக்திவேலை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். கனகவள்ளி அம்பாத்துரை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையில், சக்திவேலின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1லட்சம், நிரப்பப்படாத காசோலைகள், முக்கிய ஆவணங்களை பறித்துக்கொண்டு சக்திவேலை நரசிங்கபுரத்திலேயே இறக்கிவிட்டு சென்றனர். போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் சவேரியார் பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் 38, ரீகன் சக்கரவர்த்தி 37, பஞ்சம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்குமார் 38, வேடபட்டியை சேர்ந்த பாலாஜி 29 ஆகிய 4 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மேலும் 5 பேரை தேடுன்றனர்.