| ADDED : டிச 31, 2025 06:02 AM
திண்டுக்கல்: பழநி பாதையாத்திரை பக்தர்கள் செல்லும் ரோட்டில் உள்ள நடைபாதைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருளில் பயணம் செய்யும் சூழல் உருவாகி உள்ளது.தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதையாத்திரையாக பக்தர்கள் பழநிக்கு வருவது வழக்கம். அதன்படி சில நாட்களாகவே பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் போதிய வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தைப்பூசம் பிப்.,1 என்பதால் பாதையாத்திரை பக்தர்களுக்கான பணிகள் ஏதும் பெரிதாக நடக்கவில்லை. பெரும்பாலும் பக்தர்கள் நடப்பதற்கு இரவு நேரங்களை பயன்படுத்தி வருகின்றனர். நத்தம், செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட வழிகளில் திண்டுக்கல்லை கடந்து பக்தர்கள் செல்கின்றனர். ஆனால் மாவட்டம் நிர்வாகமோ ,போலீஸார் தரப்பிலோ ஒளிரும் குச்சிகள், ஜாக்கெட்கள் போன்றவை இன்னும் முழு வீச்சாக வழங்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பக்தர்கள் செல்வதை அறிந்து ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. பாதையாத்திரை பக்தர்கள் செல்லும் நடைமேடை முழுவதும் அதாவது திண்டுக்கல் முதல் பழநி வரை டியூப் லைட்டுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து கட்டப்பட வேண்டும். இதேபோல் ஆங்காங்கே ஒளிரும் குச்சிகள், பட்டைகள், அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்தாண்டில் ஜனவரி நெருங்கியும் அதற்கான பணிகள் ஏதும் நடக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயரளவில் நடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.