திண்டுக்கல் வந்த வெளிநாட்டு பறவைகள்
திண்டுக்கல்: இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏராளமான பறவைகள் வந்தன.திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலுார், கன்னிவாடி மயிலாப்பூர் குளம், ஒய்.எம்.ஆர்.பட்டி குளம், பாலராஜாக்கப்பட்டி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு இந்தாண்டு செப்டம்பரில் 'நார்தன்பின்டெய்ல்'எனும் வாத்து வகையிலான பறவைகள் பல ஆயிரம் கி.மீ., பயணம் செய்து வந்தன. இங்கு தங்கி கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்தன. குஞ்சுகள் வளர்ந்த பின் அவற்றோடு இம்மாத துவக்கத்தில் சொந்த இடத்திற்கே மீண்டும் சென்றன. இது போன்ற பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்கு இங்கு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பறவைகள் ஆர்வலர் உமா மகேஸ்வரன் கூறியதாவது: விடுமுறை நாட்களில் பறவைகள் குறித்து ஆராய்வதற்காக எங்கள் குழுவினரோடு பயணித்தோம். அந்த நேரத்தில் பாலராஜாக்கப்பட்டி குளத்தில் வெளிநாட்டை சேர்ந்த 'நார்தன்பின்டெய்ல்'இன வாத்துக்கள் சுற்றித்திரிந்தன. இதேபோல் மாவட்டத்தின் சில குளங்களிலும் இப்பறவைகள் இருந்தன. இதுபோன்ற பறவைகள் வருவது மாவட்டத்திற்கே பெருமை. வனத்துறை சார்பில் இதுபோன்று இடம்பெயரும் பறவைகளுக்காக வசதி செய்து, புதிய பறவை இனங்கள் உருவாகி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.