ஈரோடு: ஈரோடு அருகே கடத்தி செல்லப்பட்ட தந்தை சாவில், மர்மம் இருப்பதாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், மகன் புகாரளித்துள்ளார்.ஈரோட்டை அடுத்த முள்ளாம்பரப்பு, நாதகவுண்டன்பாளையம், செக்குமேடு, புதுகாலனியை சேர்ந்தவர் பெரியசாமி, 55; தனது உறவினர்களுடன் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என் தந்தை சின்னசாமியை ஜன.,5ல் ராஜா (எ) அருள் ராஜா, ஆட்டோவில் கடத்தி சென்றார். மார்ச், 19ல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அவரது பெயரில் இருக்கும் பட்டாவை பெற்று சென்றனர். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா போலீயில் புகாரளித்தேன். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, என் தந்தை இறந்து விட்டதாக தகவலறிந்து சென்றேன்.அவர் சாவில் மர்மம் இருப்பதாக, அரச்சலுார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தேன். எஸ்.ஐ., முருகேசன், தந்தையை ஆட்டோவில் கடத்தி சென்ற ராஜாவிடம், உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறினார். மேலும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் மறுநாள் (நேற்று) காலை, 10:00 மணிக்கு வருமாறு தெரிவித்தார். இதன்படி உறவினர்களுடன் நான் சென்றபோது, தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.