உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 20 ஆண்டாக மின்சாரத்துக்கு போராட்டம் :வனத்துறை தடையாக இருப்பதாக மலைவாசிகள் புகார்

20 ஆண்டாக மின்சாரத்துக்கு போராட்டம் :வனத்துறை தடையாக இருப்பதாக மலைவாசிகள் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் உள்ள பாலமலை கிராமத்தில் இருபது ஆண்டுக்கும் மேலாக மின்சாரம் வழங்குவதற்கு, வனத்துறையினரே முட்டுக்கட்டையாக இருப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு, சேலம் மாவட்டத்துக்கு பால மலை கிராமம் பொதுவாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து குருவரெட்டியூரை அடுத்து பாலமலை கிராமம் உள்ளது. இங்கு துவாரங்காடு, பெரியகுளம், ஈச்சங்காடு, உள்ளிட்ட ஐந்து மலைக்கிராமங்களில், 1,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் இயங்கி வரும் மூன்று பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பாலமலை பகுதியில் 20 ஆண்டுக்கும் மேலாக மின் வசதி இல்லாததால், பொதுமக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பாலமலைக்கு மின்சாரம் கிடைக்காமல் இருப்பதற்கு, இரு மாவட்ட வனத்துறையினர் தான் காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கூறியதாவது: பாலமலை கிராமத்தில் 20 ஆண்டுக்கும் மேலாக மின்சார வசதி இல்லை. மாலை ஆறு மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். சிம்னி விளக்கில் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவ, மாணவியர் தள்ளப்படுகின்றனர். மலை கிராமங்களில் மின் வசதி ஏற்படுத்தியுள்ள வனத்துறை, பாலமலைக்கு மட்டும், மின் வசதி ஏற்படுத்த தயங்குகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது வனத்துறையினர்தான், என்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பால மலைக்கு மின் வசதி கிடைக்க வனத்துறை தடையாக இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை