ஈரோடு: ஈரோட்டில், மூச்சு குழாயில் வாழைப்பழ துண்டு சிக்கியதால், சிறுவன் உயிரிழந்தார். ஈரோடு, அன்னை சத்யா நகரை சேர்ந்த தம்பதியர் மாணிக்கம் - முத்துலட்சுமி; கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு, 5 வயதில் சாய்சரண் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, சாய்சரண் வாழைப்பழத்தை சாப்பிட்டபோது, பழத்துண்டு மூச்சு குழாயில் சிக்கியது. மூச்சுத்திணறலால் தவித்த சிறுவனை, பக்கத்து வீட்டினர் முதலுதவி செய்து, பழத்தை வெளியே எடுக்க முயன்றனர். முடியாததால், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அந்த சிறுவன் மூச்சுத்திணறலால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். மூச்சுக்குழாயில் உணவுகள் தங்கி, மூச்சுத்திணறல் ஏற்படும்போது செய்ய வேண்டியவை குறித்து, உறைவிட மருத்துவர் சசிரேகா கூறியதாவது: சிறுவர்கள், பெரியோர் என யாருக்கும் பெரிய அளவு உணவு துண்டு, மூச்சுக்குழல் பகுதியில் சிக்கினால், மூச்சுத்திணறல் ஏற்படும். உடனே அவர்களது நெஞ்சு பகுதியை அமுக்கி, முதுகு பகுதியை சாய்த்து, வாய் வழியாக அத்துண்டை வெளியேற்ற முயல வேண்டும். அவர்களை அமர வைத்து, ஒரு புறமாக சாய்த்தும், குனிய வைத்தும், வாய் வழியாக வெளியேற்றலாம். அதுபோன்ற பிரச்னை எழுந்ததும், அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுவனை துாக்கி வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். அவர்கள் இங்கு வர, 20 நிமிடங்களுக்கு மேலானதால், காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.