| ADDED : பிப் 17, 2024 07:26 AM
ஈரோடு, : ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், நந்தா பொறியியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் பேசினார். அவர் பேசுகையில், 'நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் 'வாசிப்போம், நேசிப்போம்' என்ற அரசு கொள்கையின்படி அரசு பள்ளி மாணவ--மாணவியரின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில், புத்தகங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். கலெக்டர் கேட்டு கொண்டதற்கு இணங்க, பெருந்துறை, லக்காபுரம், செம்புளிச்சம்பாளையம், திருவாச்சி, பொலவகாளிப்பாளையம் ஆகிய ஐந்து அரசுப்பள்ளிகளுக்கு, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,500 புத்தகங்கள் மற்றும் அதற்கான அலமாரிகளை வழங்குகிறோம்' என்றார். இதன்படி புத்தகங்கள் மற்றும் அலமாரிகள் ஏற்பட்ட வாகனத்தை, அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு செல்ல கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்த நந்தா தொழில்நுட்ப வளாக அலுவலர் வேலுசாமி, கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்களை, நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.