| ADDED : ஜூலை 24, 2011 12:58 AM
கோபிசெட்டிபாளையம்: தடப்பள்ளி பாசன வாய்க்காலில் கிடந்த பெண் உடலை அகற்றக் கோரி, பாரியூர் சாலையில் சாலை மறியல் நடந்தது. கோபி நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(27), கூலித்தொழிலாளி. பத்து நாட்களுக்கு முன், இவர், தனது மனைவி ரத்னாவுடன், நஞ்ச கவுண்டன்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு விஷம் குடித்து இறந்தார். ஆனால், ரத்னா மாயமானார். கோபி போலீஸார் விசாரித்தனர். ரத்னாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
பாரியூர் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே தடப்பள்ளி வாய்க்காலில் ரத்னாவில் உடல் நேற்று மிதந்தது. நேற்று காலை 9 மணியளவில், போலீஸாருக்கு, ரத்னாவின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். மதியம் 2 மணி வரை போலீஸார் வரவில்லை. ரத்னாவின் உடல் வாய்க்காலிலேயே மிதந்தது. இதை கண்டித்து பாரியூர் ரோட்டில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் வெள்ளாளபாளையம் பிரிவு வழியாக திருப்பிவிடப்பட்டன. பாரியூர் சாலை ஈடுபட்ட மறியலை கைவிட்டு, வெள்ளாளபாளையம் பிரிவில் வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. கோபி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸார், மக்களை கலையச் செய்தனர். ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., சுந்தர்ராஜன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்தனர். பெண்ணின் உடலை மீட்டனர். அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரத்னாவின் உடல் வாய்க்காலில் மிதக்க காரணம் என்ன? என்பது பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.