ஈரோடு: ஈரோடு மாவட்ட அறநிலையத் துறை அலுவலகம் ஆட்கள் பற்றாக்குறையால் தடுமாறி வருகிறது. தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கீழ், 38 ஆயிரத்து 421 கோவில்களும், ஈரோடு மாவட்டத்தில், 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன. கோவில் நிர்வாக செயல்பாட்டை கண்காணிக்கவும், கணக்குகளை பராமரிக்கவும் மாவட்டந்தோறும் அறநிலையத்துறை அலுவலகம் செயல்படுகிறது. பூஜாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், மேம்பாட்டுக்கும் மாவட்ட அறநிலையத்துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்ட அறநிலையத் துறை அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால், அதிகாரிகள் தடுமாறி வருகின்றனர். நான்கு உதவியாளர்கள், இரண்டு ஸ்டெனோ, டைப்பிஸ்ட், மூன்று காவலாளிகள் பணியிடம் ஈரோட்டில் காலியாக உள்ளது.
காலியாக உள்ள பணியாளர்கள் பணியையும் சேர்த்து, இரட்டை பணியாக மற்ற ஊழியர்கள் செய்து வருகின்றனர். வேலைப்பளுவால் ஊழியர்கள், மன சோர்வும், உடற்சோர்வும் அடைகின்றனர். உதவியாளர்கள் பணியிடத்துக்கு குரூப்-4 தேர்வின் மூலம் ஆட்கள் எடுத்து, பத்தாண்டுக்கும் மேலாகிறது. இதே நிலைதான் மற்ற மாவட்ட அறநிலையத்துறை அலுவலகத்திலும் உள்ளது. போதிய ஆட்களை நியமிக்குமாறு, துறை ஊழியர்கள் கோருகின்றனர்.