| ADDED : செப் 19, 2011 01:21 AM
ஈரோடு: பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்பட்டுள்ள குழிகளில் வாகனங்கள் சிக்கி,
அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. முக்கியமான மெயின் ரோடுகளில் சீரமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈரோடு மாநகராட்சி, காசிபாளையம், சூரம்பட்டி,
வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் நகராட்சிகளில் ஐந்து கட்டங்களாக பாதாள
சாக்கடை திட்டம் நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு மூன்று கட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு, திட்டப்பணிகள்
நடக்கிறது. மீதம் உள்ள இரண்டு கட்டத்துக்கு டெண்டர் விடப்பட
வேண்டும்.இந்நிலையில், ஈரோட்டில் அனைத்து ரோடுகளிலும் குழிகள்
தோண்டப்பட்டு, பாதாள சாக்கடை குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக
சத்தி ரோடு, பவானி ரோடு உள்பட முக்கிய ரோடுகளிலும் குழிகள் தோண்டப்பட்டு,
குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு மண் போட்டு மூடப்பட்டுள்ளன. தற்போது
மழைக்காலம் என்பதால், மழை பெய்யும் போது மண் இறங்கி குழியாகி விட்டது.
வாகனங்கள் செல்லும் போது குழிக்குள் சக்கரம் சிக்கி, பெரும்
போராட்டத்துக்கு பிறகு தான் வாகனங்களை வெளியே எடுக்க வேண்டி வருகிறது. சில
சமயங்களில் குழிக்குள் வாகனம் சிக்கும் போது, பின் வரும் வாகனங்கள் அது
தெரியாமல் திடீரென மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில் பலர்
இறந்துள்ளனர்.பாதாள சாக்கடை திட்டத்தின் படி குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு,
மீண்டும் புதிதாக ரோடு போடவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐந்து
கட்ட திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் புதிதாக ரோடு போடும் பணி
துவக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு இன்னும் ஓரிரு
ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரையில் விபத்து தவிர்க்க முடியாத வகையில் ஆகி
விடும்.எனவே, நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்லும் ரோடுகள் அனைத்திலும்
பாதாள சாக்கடை திட்டத்துக்காக போடப்பட்ட குழிகள் மூட மாநகராட்சி மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.