| ADDED : செப் 19, 2011 01:26 AM
காங்கேயம்: காங்கேயத்தில் கால்நடைத்துறை சார்பில் 59 பயனாளிகளுக்கு ஆடு
மற்றும் 50.72 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை ஊரக தொழில்துறை
அமைச்சர் சண்முகவேலு வழங்கினார்.காங்கேயத்தில் கால்நடைத்துறையின் சார்பில்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. திருப்பூர் கலெக்டர் மதிவாணன்
தலைமை வகித்தார். காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் முன்னிலை வகித்தார்.
தாராபுரம் ஆர்.டி.ஓ., அழகுமீனா வரவேற்றார். ஊரக தொழில்துறை அமைச்சர்
சண்முகவேலு, பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் ஆகியோர் நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்.நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சண்முகவேலு
பேசுகையில், ''தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், தமிழகம் அனைத்து
துறைகளிலும் முதலிடத்தை பெற வேண்டும் என்பதை முதல்வர் கொள்கையாக
கொண்டுள்ளார்.இதற்காக தினமும் இரவு பகலாக 20 மணி நேரம் உழைக்கிறார். கிராம
மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக ஆடு, மாடுகளை வழங்கி
வருகிறார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது
துவங்கப்பட்டுள்ள இலவச திட்ட பணிகள் படிப்படியாக வழங்கி முடிக்கப்படும்,''
என்றார்.59 பயனாளிகளுக்கு 7.08 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுகள்
வழங்கப்பட்டன. 47 மாற்று திறனாளிகளுக்கு 5.64 லட்சம் ரூபாய் செலவில்
உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய உதவித்தொகை திட்டத்தில், 203 முதியோருக்கு
36 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு
திட்டத்தின் கீழ், காங்கேயத்தில் பத்து பேருக்கு 3.04 லட்சம் ரூபாய்
மதிப்பிலும், வெள்ளகோவிலில் 15 பேருக்கு 5.03 லட்சம் ரூபாய் மதிப்பிலும்,
நொய்யல் ஆறால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு 5.02 லட்சம் ரூபாய் சேர்ந்து
மொத்தம் 50 லட்சத்து 72 ஆயிரத்து 314 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன.கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் முத்துகோபாலகிருஷ்ணன்,
காங்கேயம் மண்டல துணை தாசில்தார் நடராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல
அலுவலர் முத்துசாமி, டி.எஸ்.ஓ., ஜெயக்குமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.தாசில்தார் குருநாதன் நன்றி கூறினார்.