கோபிசெட்டிபாளையம்:கோபி, கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து தன்னாசிபுதூர்
பொதுமக்கள், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக
தெரிவித்தனர்.கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு
தன்னாசிபுதூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு
சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, சுடுகாடு வசதி உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் என்பதே கிடையாது. பல முறை கோரிக்கை வைத்தும், பஞ்சாயத்து
நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. அரசியல்
கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் வீடுவீடாக சென்று ஓட்டு
சேகரித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தராத பஞ்சாயத்து
நிர்வாகத்தை கண்டித்து வீடு தோறும் கறுப்பு கொடி கட்டியவாறு, நேற்று
உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இப்பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர்.பொது மக்கள் கூறியதாவது:தன்னாசிபுதூரில் மழைக்காலத்தில்
சாக்கடை தேங்கி கொசு தொந்தரவு அதிகம். சுடுகாடு வசதி இல்லததால்,
இப்பகுதியினர் இறந்தால் எல்.பி.பி., வாய்க்கால் கரையில் பிணங்களை புதைத்து
வந்தோம். எல்.பி.பி., வாய்க்கால் கரையில் பிணங்களை புதைக்க கூடாது என
பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை புதைக்க
முடியாமல் தவிக்கிறோம். தெரு விளக்கு வசதி இல்லை. இரவு நேரத்தில் கடுமையாக
சிரமப்பட வேண்டி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலை,
பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன. மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீர்
தேங்கி நிற்பதால், வாகனத்தில் செல்ல முடியவில்லை.இப்பகுதிக்கு ஆழ்குழாய்
அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டையில் ஆழ்குழாய்
அமைந்துள்ளதால், கழிவு நீர் ஆழ்குழாய்க்குள் செல்கிறது. தண்ணீரை பயன்படுத்த
முடியாத நிலை உள்ளது. குடிநீர் வசதி என்பதே கிடையாது. இதை கண்டித்து
வீடுகள் தோறும் கறுப்பு கொடி கட்டியுள்ளோம். அடிப்படை வசதி இல்லாததால்
உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.பவானி: பவானி அருகேயுள்ள சித்தோடு, ஈரோடு மாநகராட்சி முதல்
வார்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி., சமத்துவபுரம், பெருமாள் நகர், வி.ஐ.பி. நகர்,
பாரதி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள
கோழிப்பண்ணைகளால், ஈக்கள் பெருகியுள்ளன. வீட்டு ஜன்னலை திறந்து வைக்க
முடிவதில்லை. உணவுப் பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், டீ, காஃபி உள்ளிட்ட
அனைத்தையும் ஈக்கள் மொய்த்து, அவற்றை பயன்படுத்த முடியாமல் செய்து
விடுகின்றன.இப்பகுதி மக்கள் 15 ஆண்டுகளாக இப்பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
கடும் சுகாதாரக் கேடு காரணமாக பல்வேறு நோய்கள் பரவுகின்றன. பஞ்சாயத்து
முதல் மாவட்ட கலெக்டர் வரை பலரிடம் முறையிட்டும் எவ்வித தீர்வும்
கிடைக்கவில்லை. இப்பிரச்னையைக் கண்டித்து, மாநகராட்சி முதல் வார்டுக்கு
உட்பட்ட ஐந்து கிராம மக்களும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக,
ஆவின் பால்பண்ணை அருகே போர்டு வைத்துள்ளனர்.