| ADDED : ஜூலை 07, 2024 02:47 AM
பெருந்துறை:சிப்காட்
கழிவு நீர் பொது சுத்திகரிப்பு மைய பணியை தொடங்காமல், அரசு மெத்தனம்
காட்டி வருவதால், சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக,
சட்டசபை சபாநாயகர் அப்பாவுக்கு, பெருந்துறை எம்.எல்.ஏ.,
ஜெயக்குமார், நேற்று கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர்
கூறியிருப்பதாவது: பெருந்துறை சிப்காட் பகுதிகளில் செயல்படும்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நல்லா ஓடையில்
வெளியேறுவது நிறுத்தப்படும் என்று அரசு தெரிவித்தது. இதேபோல்
சிப்காட் வளாகத்தில் உள்ள, 63 ஆயிரம் டன் திடக்கழிவை இரு மாதங்களில்
அகற்றப்படும் என்றும் கூறியது. கழிவுநீர் பொது சுத்திகரிப்பு
நிலைய பணி ஆறு முதல் எட்டு மாதங்களில் முடிக்கப்படும் என, 2023 நவ.,
மாதம் அறிவித்தனர். எட்டு மாதங்களாகியும் பணி தொடங்கவில்லை.
தான் கொடுத்த பல்வேறு உத்தரவாதங்களில் அரசு மெத்தனம் காட்டி
வருகிறது. இதனால் பெருந்துறையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு
வருகிறது. போராடும் மக்களை கைது செய்யும் நிலைக்கு போலீசார்
தள்ளப்பட்டுள்ளனர். எனவே சிப்காட் சாயக்கழிவு நீர் பிரச்னையில்,
அரசு கொடுத்த உத்தரவாதங்களின்படி பணிகளை விரைந்து முடித்து தீர்வு
காண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.--