| ADDED : ஜூன் 10, 2024 01:29 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி தம்பதி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவலுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமு, 38; இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரளா, 25; இவர்களுக்கு கீர்த்தனா, 13; மேகா, 6; என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ராமு, துணிகளை துவைத்து மாடியில் ஸ்டே ஒயர் பைப்பில் காய வைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. உடன், அருகில் இருந்த அவரது மனைவி சரளா, அவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.இதில், இருவரும் துாக்கியெறியப்பட்டு மயங்கி விழுந்தனர். உடன் அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.