| ADDED : ஜன 08, 2024 06:04 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படுகின்றன. 10ம் வகுப்பு அதற்கு மேலான கல்வித் தகுதியுடையவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தும், வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தோல்விக்கு 200 ரூபாய்., தேர்ச்சிக்கு 300 ரூபாய், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு 400 ரூபாய். பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாய், மாற்றுத் திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு 600 ரூபாய் மற்றும் மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு 750 ரூபாய். பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும்.விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.மேலும், https://employmentexchange.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் பிப்ரவரி 29ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.