குன்றத்துார்:குன்றத்துார் அருகே சின்னபணிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 35. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, குன்றத்துார் அருகே கோவூரில் சாலையோரம் மது அருந்தி உள்ளார்.அப்போது, அங்கு வந்த கோவூரைச் சேர்ந்த கணேஷ், 35, என்பவர், மதுபோதையில் யுவராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.இந்த நிலையில், அங்கு வந்த கணேஷின் நண்பர்கள், யுவராஜை கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த யுவராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், யுவராஜின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.கொலையில் ஈடுபட்ட கணேஷ், அவரது நண்பர்கள் தினேஷ், 34, சரண்ராஜ், 24, பிரவீன்குமார், 23, வசந்த், 25, சிலம்பரசன், 24, ஆகிய ஆறு பேரையும், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.