| ADDED : ஜூன் 28, 2024 01:57 AM
கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி. ஸ்ரீபெரும்புதுாரில் மத்திய - மாநில அரசு நிதியுதவியுடன், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தில், 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. .இதனால், இப்பகுதியில் உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே சென்று வந்த அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், காட்டு கூட்டுச்சாலையில் திருப்பி விடப்பட்டு மண்ணுார், நெமிலி வழியாக சென்று வருகின்றன. இதில் காட்டு கூட்டுச்சாலையில், 'மாற்றுப்பாதையில் செல்லவும்' என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த எச்சரிக்கையையும் மீறி, வெளி மாநில கனரக லாரி ஒன்று, இந்த சாலையில் வந்த போது சிறுபாலம் கட்டும் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனால், இவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வாயிலாக, நேற்று மதியம் லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது.எனவே, எச்சரிக்கை பதாகையை மீறி வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.