காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை பகுதி யில், நான்கு இளம் பெண்கள் தங்கி, பண்ரூட்டி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.கடந்த, மே- 23ம் தேதி இரவு, நான்கு பெண்களும், அவர்கள் தங்கி இருந்த மொட்டை மாடியில், துாங்க சென்றனர். அப்போது, செங்கல்பட்டு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுதாகர், 37. என்பவர், நான்கு மொபைல்களை திருடிச் சென்று உள்ளார்.திருடு போன மொபைல்போனுக்கு, இளம் பெண் ஒருவர், மற்றொரு போனில் இருந்து அழைத்துள்ளார்.மொபைால்போனை திருடிச் சென்ற சுதாகர், இளம் பெண்ணிடம், ஆபாசமாக பேசிஉள்ளார்.அந்த இளம் பெண்ணும், லாவகமாக பேசி மொபைல்களை கொடுக்கும்படி கேட்டுஉள்ளார். இளம் பெண்ணின் வார்த்தையை நம்பி, வலையில் விழுந்த சுதாகர், மொபைல் போன்களை கொடுக்க சென்றபோது, பெண்கள் தர்ம அடி கொடுத்து, வாலாஜாபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது, தொடர்பாக வழக்கு காஞ்சிபுரம் ஜெ.எம்., நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கு விசாரித்த நீதிபதி வாசுதேவன், சுதாகருக்கு ஒராண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்து உள்ளார்.இதையடுத்து, நேற்று, மீண்டும் அவர் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.