திருப்போரூர், : கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் மாலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, வேனில் குன்றத்துார் சென்றனர்.குன்றத்துாரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, அன்று இரவு, வேனில் 20 பேர் வீடு திரும்பினர்.அப்போது, திருப்போரூர்- ஆலத்துார் ஆறுவழிச் சாலையில் வேன் சென்றபோது, தண்டலம் அருகே, இரவு 10:00 மணி அளவில், திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.அதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.இதில், விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், 52, என்பவர், வேன் அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், வேனில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர்.அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மூன்று 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.