| ADDED : மே 07, 2024 03:50 AM
சென்னை, : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த போந்துாரில், 'மார்க் பிராப்பர்ட்டீஸ்' நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, சோனல் ஜோகியா என்பவர் முதலீடு செய்தார்.இவருக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, சோனல் ஜோகியா ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.இந்த புகாரை விசாரித்த ஆணையம், வீடு ஒப்படைக்காததால், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடு வழங்க, மார்க் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்துக்கு, 2019ல் உத்தரவிட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம், இதை அமல்படுத்துவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து, மனுதாரர் ரியல் எஸ்டேட் ஆணையத்தை மீண்டும் அணுகினார். இதை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமாமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:ஆணைய உத்தரவுப்படி, இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்நிறுவனம் மீது வருவாய் மீட்பு சட்டப்படி 'வாரன்ட்' பிறப்பித்து காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.