சென்னை:அகில இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டியில், நேற்றைய இறுதி ஆட்டத்தில், தமிழகம் 2 - 1 என்ற கணக்கில் கர்நாடகாவை தோற்கடித்து, சாம்பியன் கோப்பை வென்றது.தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின், 35வது அகில இந்திய அஞ்சல் துறை ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நிறைவடைந்தது.இதில் தமிழகம், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய ஐந்து வட்ட அணிகள், 'லீக்' முறையில் மோதின. அனைத்து 'லீக்' சுற்றுகள் முடிவில், தமிழகம் மற்றும் நடப்பு சாம்பியனான கர்நாடகா அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று மதியம், 2:00 மணிக்கு நடந்த இறுதிப் போட்டியில், தமிழக அணி, 2 - 1 என்ற கணக்கில் கர்நாடகாவை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழக அணியில் சுதர்ஷன் மற்றும் நவீன்குமார் தலா ஒரு கோலும், கர்நாடகா வீரர் ரமேஷ் ஒரு கோலும் அடித்தனர். இதில், சுதர்ஷனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பர் விருது, தமிழக வீரர் பரணிராஜுக்கு வழங்கப்பட்டது.அதிக கோல் அடித்த வீரர் விருது, கர்நாடகா வீரர் ரமேஷுக்கும், தொடர் நாயகன் விருது, கர்நாடகாவின் விநாயக் பிஜ்ஜாவாட்டுக்கும் வழங்கப்பட்டன.இதில் மத்தியபிரதேசம், ஒடிசா முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்தன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அஞ்சல் துறை பொது இயக்குனர் ஸ்மிதா குமார், தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.