| ADDED : பிப் 23, 2024 01:12 AM
உத்திரமேரூர் உத்திரமேரூர் ஒன்றியத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் நேற்று 2வது நாளாக நடந்தது.இத்திட்டத்தில் நேற்று முன்தினம் உத்திரமேரூர் பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி அன்று இரவு உத்திரமேரூர் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கினார்.தொடர்ந்து, நேற்று காலையில் திருப்புலிவனம் ஊராட்சியில் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறதா, அக்கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் போதுமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா என்பன குறித்து பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.அதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம், காட்டாங்குளம், பழவேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் நடைபெற்றது.இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பங்கேற்று அரசு அலுவலக செயல்பாடுகள் மற்றும் ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.காட்டாங்குளம் ஊராட்சி முகாமின் போது, அப்பகுதியில் செயல்படும் வி.ஏ.ஓ., அலுவலகம் பழுதாகி உள்ளதாகவும், அக்கட்டடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டமைத்து தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.அதேபோன்று ஊராட்சிகள்தோறும் பொதுமக்கள்அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பெற்று சென்றனர்.