| ADDED : பிப் 21, 2024 10:12 PM
சென்னை;ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டது 'லுப்தான்சா' ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, ஜனவரியில் ஒரு நாள், வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால், வேலை நிறுத்தப் போராட்டத்தில், மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக, சென்னை - ஜெர்மனி இருமார்க்கத்திலும், இரண்டாவது நாளாக நேற்றும், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.ஜெர்மனி பிராங்க்பார்ட் நகரில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 11:50 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய லுப்தான்சா பயணியர் விமானம் ரத்து செய்யப்பட்டது.மீண்டும் நள்ளிரவு 1:50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு புறப்படும் அதே விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. தவிர, அந்த விமான நிறுவனத்தின் சரக்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.இதனால், சென்னையில் இருந்து ஜெர்மன், அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணியர் பாதிக்கப்பட்டனர். அந்நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளும் முடங்கின.