| ADDED : நவ 26, 2025 03:35 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் துார்ந்துள்ளதை, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர், பிள்ளையார்பாளையம் ஒட்டியுள்ள வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையாக பராமரிக் காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது. மழை பெய்யும் போது, கால்வாய் மூலம் வேகவதி ஆற்றுக்கு செல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது. நெல் நாற்று நடவு செய்துள்ள விவசாய நிலம் மழைநீரால் மூழ்கி விடுகிறது. இதனால், ஆண்டுதோறும் பருவமழையின்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பிள்ளையார்பாளையம் ஒட்டியுள்ள வேகவதி ஆற்றில் மழைநீர் செல்லும் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.