| ADDED : ஏப் 25, 2024 04:56 AM
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றில் சேதம் அடைந்த, தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகரம்-பசுபதிபாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், ஐந்து சாலை பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் கட்டட பணிகள் துவங்கிய போது, அமராவதி ஆற்றில் பொதுமக்கள் செல்லும் வகையில், தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தை, ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை காரணமாக, தரைப்பாலம் சேதம் அடைந்தது. குறிப்பாக, பாலம் அமைக்க போடப்பட்ட ராட்சத குழாய்கள் வெளியே தெரிந்தது. இதனால், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசி க்கும் பொதுமக்கள், சேதம் அடைந்துள்ள தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும், 12 ல் கம்பம் நடுதலுடன் விரைவில் தொடங்குகிறது. பிறகு அமராவதி ஆற்றில், தரைப்பாலம் அருகே கம்பம் ஆற்றில் விடப்படும். இதையடுத்து, அமராவதி ஆற்றில் சேதம் அடைந்துள்ள, தரைமட்ட பாலத்தை மண் கொட்டி சீரமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.