ஈரோடு, உலக அளவிலான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்தின் பட்டாயா நகரில், கடந்த மாதம் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை உட்பட, 20 நாடுகளை சேர்ந்த, 267 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய அணியில் இடம் பெற்ற, 30 பேரில், 19 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.புல் பவர் லிப்டிங், பென்ஞ்ச் பிரஸ் மற்றும் டெட் பவர் லிப்டிங், சிங்கிள் பவர் லிப்டிங் அடிப்படையில், டீன்ஸ், சப்-ஜூனியர், ஜூனியர், ஓபன், மாஸ்டர் என்ற பிரிவுகளில், 44 கிலோ, 52 கிலோ, 56 கிலோ என பெண்களுக்கு எட்டு விதமான எடை பிரிவுகளிலும், ஆண்களுக்கு, 11 விதமான எடை பிரிவுகளிலும் போட்டி நடந்தது. இதில் ஈரோடு சூரம்பட்டிவலசை சேர்ந்த திவாகர், 56 கிலோ எடை பிரிவில் டெட் பவர் லிப்டிங் போட்டியில், மூன்றாவது சுற்றில், 185 கிலோ துாக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.இதுகுறித்து திவாகர் கூறியதாவது: ஈரோட்டில் தனியார் கல்லுாரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறேன். தமிழ்நாடு மெச்சூர் பவர் லிப்டிங் அசோசியேசனில் பயிற்சி பெற்றேன். இதற்கு உறுதுணையாக இருந்த எனது மாஸ்டர்கள் கார்வேந்தன், ராஜசேகர் மற்றும் பெற்றோருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.